கனவு சுவராஸ்யமானது. கவலைகளை மறந்து கண் அயரும் போது, சில நேரங்களில் ஷங்கர் இயக்கியது போலப் பிரமாண்ட சம்பவங்களும், பல நேரங்களில் ஹரி காட்டுவது போலக் கொலை வெறித் தாக்குதல்களும் மனதில் நிகழும். கனவுக்குக் காரணம் உடல் தூங்கி மனது தூங்காமல் இருப்பதோ? ஆழ் நிலை ஞானத்தை நமக்குத் தெரியப் படுத்தும் அடையாள மொழி தான் கனவு என்று கருதுவாரும் உண்டு. கனவு மனித உடலுக்கு ஓய்வு தருகிறது. மராமத்துச் செய்கிறது. புத்துணர்வு, எழுச்சி அளிக்கிறது என்று அறிவியலார் கருதுகிறார்கள்.
கனவுகள் வருவது ஏன்?
கனவுகள் பெரும்பாலும் இழப்பீடு போல அமைகிறது. சோகத்தையே சுமந்து திரிபவனுக்குத் திரிஷாவுடன் டேட்டிங் போவது போலக் கனவு வந்தால் எப்படி இருக்கும்? பேரின்பம் தானே. இதற்கு எதிர்மறையாகத் தொட்டதெல்லாம் துலங்கும் நபருக்கு ஷேர் மார்க்கெட்டில் நான்கு கோடிகள் இழப்பது போலக் கனவு வருவதும் இயல்பு என்கிறார் கார்ல் ஜங் என்ற மனவியல் நிபுணர்.
நமது ஆளுமையின் வளர்ச்சி அடையாத குணாதிசயங்கள் தான் நம் கனவில் வெளிப்படுகிறதாம். இதனால் தான் நம் வாழ்வியலுக்கு ஒவ்வாத நிகழ்வுகள் கனவை ஆக்கிரமிக்கின்றன.
எனது நண்பர் ஒருவர் சமீபத்தில் ஓபன் ஹார்ட் சர்ஜெரி செய்து கொண்டார். மயக்க நிலையிலிருந்து மெல்ல மெல்ல சுய நினைவு பெறுகிற சமயத்தில் அவர் பல கனவுகளைக் கண்டதாகப் பகிர்ந்து கொண்டார். அவருக்கு இலக்கியத்திற்கான புக்கர் பரிசு கொடுக்கப் பட்டதாகவும், அவர் புத்தகத்தை எதிர்த்துக் கலாச்சாரக் காவலர்கள் போராட்டம் செய்ததாகவும், புத்தகப் பிரதிகளைத் தீயிட்டுக் கொளுத்தியதாகவும், சமரசப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிர்வாகத்தினர், மிரட்டி, ‘இனி எழுத மாட்டேன்’ என்று உறுதி வாங்கிக் கொண்டதாகவும், பல நடை முறைக்கு ஒவ்வாத சம்பவங்களாக விவரித்தார். சாகித்ய அகாடமி பரிசு பெறுகிற லெவலுக்கு எழுதும் திறனில்லாத இவருக்கு வந்த கனவுகள் நிச்சயம் அவரின் வாழ்வியல் முறைக்கு எதிரானது தான்.
மன அழுத்தம், அதனால் உண்டாகும் பதட்டம் மற்றும் அதிர்ச்சியிலிருந்து விடுபடும் முயற்சியாகவும் கனவுகள் அமையலாம்.
நண்பரொருவரின் நண்பர் அவர். தன் வயதான மகளுக்குத் திருமணம் ஒழுங்கு செய்திருந்தார். கடைசி நேரத்தில் கல்யாணம் தடைபட்டு நின்று விட்டது. பேரதிர்ச்சி. மனக் கிலேசம் அதிகமாகித் தூங்க முடியாமல் தவித்தார். அன்று தீர்வாக அவருக்கு ஒரு கனவு வந்தது. அவர் மகள் ஒர் ஆட்டோ டிரைவருடன் ஓடி விட்டதாக. ஏனிப்படி? மழை அரித்த ரோட்டில் பந்தல் போட குழி தோண்டி குதறியது போல. அப்படி ஒன்றும் நடக்க வில்லை. மகள் வீட்டில் தான் இருந்தாள். ஆனாலும், இந்தக் கனவு எப்படித் தீர்வாகும்? அவர் நேர்மையானவர். அவரது குணாதிசயத்துக்கு நேர்மாறானத் தீர்வாகவே இது தோன்றியிருக்கக் கூடும்.
மனதும் ஞாபகமும் சரிவரச் செயல்படச் சீரான தூக்கம் அவசியம் என்று அறிவியல் ஒத்துக் கொள்கிறது. அதே நேரம் நான்கு மணிநேரத் தூக்கத்தால் ஞாபக ஒருங்கிணைப்பை முற்றிலும் செய்து முடிக்க முடியாது. ஞாபக ஒருங்கிணைப்பு முழுமைப் பெற கனவுகள் அவசியமாகிறது. பெரும்பாலான கனவுகளில் சமீபத்திய நிகழ்வுகள் மையப் பொருளாகிறது. மீன் கடையில் கைகலப்பில் ஈடுபட்டவனுக்குத் திமிங்கலத்தால் விழுங்கப் படப் போவது போலக் கனவு வரலாம். இதற்குக் காரணம், மூளை ஞாபகங்களை ஒழுங்குப் படுத்தி அமைப்புப் படுத்துவதே. கனவுகள் ஒரு வகையில், மூளையை மறுதுவக்கம் செய்வதற்குச் சமமாகும்.
இப்படி நாம் தூங்கும் போதும் மூளை சம்பவங்களை ஒழுங்குப்படுத்தி ஒருங்கிணைப்பதால், பல சமயங்களில் நிகழ்வுலகப் பிரச்சனைகளுக்குக் கனவுகள் தீர்வாகிறது.
சிக்மண்ட் பிராய்ட் கனவுகளைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘கனவுகள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு. அது மயக்கநிலை எண்ணங்கள், விருப்பங்கள் மற்றும் ஆசைகளைப் பிரதிபலிக்கிறது.’ என் நண்பர் ஒருவருக்கு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற ஆசை உண்டு. இப்போது பேராசிரியராகப் பணி புரிகிறார். அவருக்கு அடிக்கடி, அவர் டாக்டராகி ட்ரீட்மென்ட் கொடுப்பது போலவும் ஆபரேசன் செய்வது போலவும் கனவுகள் வருகிறதாம். டாக்டராக வேண்டுமென்ற அவா எப்போதும் இருந்தது இல்லை. ஆனால் இஃது ஒடுக்கப்பட்ட உணர்வாயிருந்திருக்கலாம். நம்மையறியாமல் ஆழ்மனக் கிடங்கில் அமிழ்ந்து கிடக்கும் எண்ணங்கள் கனவுகளில் மட்டுமே வெளிப்படும்.
ஆகக் கனவுகளை எழுதுபவர்கள் நாமே. ஜிகினா கனவுகளின் ஸ்கிரிப்ட் ரைட்டர் நம் மனம் தான்.